Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Wednesday 27 July 2011

ஜென் -கவிதை -

ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெங் டீ சான் (Zeng T”san) “அப்பழுக்கற்ற நம்பிக்கையுள்ள மனம்” என்னும் நீண்ட கவிதையில் ஜென்னுடன் நம்மை நெருங்கச் செய்கிறார்.
அப்பழுக்கற்ற நம்பிக்கையுள்ள மனம்
——————————————
தனது விருப்பங்களில் பற்றில்லாதவருக்கு
உன்னதமான அந்தப் பாதை கடினமானது அல்ல
ஏக்கமோ ஒவ்வாமையோ இரண்டும் போகட்டும்
ஒவ்வொன்றும் தெள்ளத் தெளிவாகும்
வானமும் பூமியும் வெவ்வேறானவையே
நீ நூலிழையான வேறுபாட்டையே நோக்கினால்
நீ உண்மையை உணர வேண்டுமென்றால்
ஏற்றலையும் எதிர்ப்பதையும் விட்டு விடு
நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடைப்பட்ட போர்
மனதின் அடிப்படை நோயாகும்
ஆழ்ந்த உட்பொருளை நாடாமல்
மனதின் அழகிய சூழலை அவஸ்தைப் படுத்துகிறாய்
பிரபஞ்சத்தைப் போல விளிம்பற்றதாய்
குறையேதுமின்றி முழுமையானதாய்
அதை நீ காண இயலாததற்குக் காரணம்
நீ அறிந்ததெல்லாம் தேர்ந்தெடுப்பது அல்லது நிராகரிப்பது
உலகுடன் சிக்கிக் கட்டுறாதே
உள்ளீடற்ற உலகில் உன்னை இழக்காதே
அனைத்தும் ஒன்றெனும் உணர்வில் அமைதி காண்
எல்லாத் தவறுகளும் தானே மறையும்
‘தாவோ’ வாழ்க்கையை நீ வாழா விட்டால்
அறுதி செய்வதும் மறுப்பதுமாய்க் கழியும் உன் காலம்
உலகம் உண்மையென்று நீ அறுதியிட்டால்
அதன் ஆழ்ந்த உண்மையைப் புறந்தள்ளுகிறாய்
உலகின் உண்மையை நீ மறுத்தால் நீ காணாதது
எல்லா உயிர்களுள் உறையும் தன்னலமின்மையை
இவற்றையெல்லாம் பற்றி எவ்வளவு யோசிக்கிறாயோ
அந்த அளவு உண்மையை விட்டு விலகுகிறாய்
சிந்தனை எல்லாவற்றிடமிருந்தும் விலகி நில்
நீ அடைய முடியாத இடமே இல்லை
வேரை நோக்கித் திரும்பினால் அர்த்தத்தை உணர்கிறாய்
தோற்றங்களைத் துரத்தினால் வெற்றிடத்தை
உண்மையைத் தேடிக் கொண்டே இருக்காதே
அபிப்ராயங்களை (கருத்துக்களை) விட்டுத் தள்ளு
தாவோ உடன் ஒருங்கிணைந்த மனதிலிருந்து
வெறுமை நீங்கி விடும்
நீ தன்னை சந்தேகிக்கா விட்டால்
பிரபஞ்சத்தை முழுமையாக நம்பலாம்
பார் நீ திடீரென விடுதலையாகி விட்டாய்
பற்றிக் கொள்ள ஏதும் மீதவில்லை
எல்லாமே சூன்யமாய் பிரகாசமாய்
தன்னளவில் முழுமையாக -
‘தான்’ ‘தான் இல்லை’ என்ற இரண்டுமே அற்ற
உலகில் தன்வயமாய் இருக்கின்றன
அதன் சாரத்தை நீ வர்ணிக்க விரும்பினால்
‘இரண்டில்லை’ என்பதே ஆகச் சிறந்தது
எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும்
ஞானம் பெற்றோர் அதன் உண்மைக்குள் கலந்தனர்
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்
அபூர்வமான லாப நட்டமற்ற நிலை அது
இவ்விடம் அவ்விடம் என்று ஏதுமில்லை
விளிம்பற்ற வெளி உன் கண் முன்னே
நாம் ஏற்படுத்திய எல்லைகள் அழிந்தால்
கடுகளவானதும் பிரம்மாண்டமும் ஒன்றே
வெளிப்புற வேலிகள் இல்லையேல்
பிரம்மாண்டமும் கடுகளவும் ஒன்றே
இருப்பது இல்லாமலிருப்பதின் ஒரு அம்சமே
இல்லாமலிருப்பது இருப்பதிலிருந்து வேறானது அல்ல
இதைப் புரிந்து கொள்ளும் வரை நீ எதையும்
தெளிவாகக் காண்பது இயலாது
ஒன்றே பலவும் பலவும் ஒன்றே இதை
உணர்ந்தால் புனிதமும் ஞானமும் எதற்கு?
பரிபூரணமான நம்பிக்கையில் எல்லா ஐயங்கள்
இடையறா முயற்சிகள் அனைத்தையும் தாண்டி
மனம் பூரண சாந்தி பெறும்
அங்கே நேற்றில்லை இன்றில்லை
நாளையுமில்லை


- நன்றி திண்ணை இணையதளம்

0 comments:

Post a Comment